பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது உதவிய இந்தியாவிற்கு இலங்கை நன்றிக் கடன்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு பிறகு இலங்கையில் முக்கிய வருவாயாக திகழ்ந்து வந்த சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிய செலவாணி கையிருப்பு வெகுவாக குறைந்தது. இதனால் இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்நாட்டுக்கு இதுவரை இந்தியா சுமார் ரூ.32,000 கோடி மதிப்பிலான கடன் உதவியை வழங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க், பிரதமர் தினேஷ் குணவர்த்தனே மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரி ஆகியோரை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு இந்தியா உதவிடும் என்றும் சர்வதேச நிதியம் கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா அளிப்பதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திந்த அமைச்சர் ஜெய்சங்கர், பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து வரும் போது அந்நாட்டை இந்தியா தனியாக விட்டுவிடாது. மற்றவர்களுக்காக காத்திருக்காமல் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது.
சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கு தேவையான உறுதிபாட்டை இந்தியா வழங்கியுள்ளது. முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். முதலீடுகளை செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை இலங்கை அரசு உருவாக்க வேண்டும். ரூபே, யுபிஐ உள்ளிட்ட வசதிகளை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது உதவிய இந்தியாவிற்கு இலங்கை நன்றிக் கடன்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.