இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 141 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், ரத்தினம், கீதா குமாரி அவர்களது. குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மற்றும் மன்னாரை சேர்ந்த சாகுல் ஹமீது ஒருவர் என மொத்தமாக எட்டுபேர் இலங்கை மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி பாலம் அருகே வந்திறங்கினர்.
தனுஷ்கோடி வந்த அவர்கள் தாங்களாகவே ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்த மண்டபம் மரைன் போலீசார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளோம். இதுமட்டுமின்றி தாங்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழகத்திற்கு அகதியாக வந்து குடியாத்தம் முகாமில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







