‘இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

நாட்டுக்குச் சேவை செய்ய, நல்லுறவை வளர்த்துக் கொள்ள இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள…

நாட்டுக்குச் சேவை செய்ய, நல்லுறவை வளர்த்துக் கொள்ள இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிபத் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டுக்குச் சேவை செய்ய நல்ல வாய்ப்பாக இளைஞர்களுக்கு அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ராணுவ நிதியை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு மட்டும் 801 பில்லியன் டாலரைச் செலவு செய்துள்ளது, சீனா 293 பில்லியின் டாலரைச் செலவு செய்துள்ளது, இந்தியா 76. 6 பில்லியின் டாலரைச் செலவு செய்துள்ளது, கடந்த 2012 ஆண்டிலிருந்து இந்தியா ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையை 33 சதவீதமாக அறிவித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அக்னிபத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது, அக்கினிபத் வெற்றிகரமான திட்டம் என இளைஞர்கள் பார்க்கின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர், இத்திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டு பணியில் இருப்பார்கள், அதனைத் தொடர்ந்து வரி பிடித்தம் இல்லாமல் 11.71 லட்ச ரூபாய் வழங்கப்படும், மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இதில் 25% பேரை மீண்டும் ராணுவ பணியில் அமர்த்தப்படுவார்கள், மேலும் ராணுவ பயிற்சி அனுபவம் மூலம் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் முன்னுரிமை கிடைக்கும், நிறைவு காலத்தில் பெற்ற பணப்பலனை வைத்துக்கொண்டு எதிர்கால திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டும் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்து உள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், தற்போது அக்னிபாத் திட்டத்தில் மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராம்நாடு, தேனி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 36,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், மேலும் மேலும் விண்ணப்பிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘சீரான முறையில் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்’

கடந்த கால அம்மாவின் ஆட்சியில் இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பு பெருக்கிடும் வண்ணம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உருவாக்கப்பட்டது, இதன் மூலம் இளைய சமுதாயத்தை அறிவுசார்ந்த சமுதாயமாகவும், நம்பிக்கை மிக்க சமுதாயமாகவும் இபிஎஸ் உருவாக்கினார் எனத் தெரிவித்துள்ள அவர், இளைஞர்களுக்குத் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு சுய வாழ்வாதாரம் பெருகின எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அக்னி பத் என்பது நாட்டுக்குச் சேவை செய்யும் மனநிறைவைத் தரும், அதன் மூலம் வாழ்வாதாரம் பெருகும், அதன் மூலம் கிடைக்கும் பணப் பலன் மூலம் ஏழ்மை போகும் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த திட்டத்தினை வெற்றிகரமான திட்டம் என்று இளைஞர்கள் பார்க்கின்றார்கள் எனவும், நாட்டுக்குச் சேவை செய்ய, நல்லுறவை வளர்த்துக் கொள்ள இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.