இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இதனை கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீனவர்கள் பொங்கல் பண்டிகையில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து இது பெரும் வேதனையை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் விடுதலையை இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 55 பேரும் கொழும்புவில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு சிறுவன் மற்றும் கடந்த 5ந்தேதி விடுவிக்கப்பட்ட மீனவர்களில் மூன்று பேர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் உட்பட 59மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தமிழ்நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.