பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை பகிர்ந்த மத்திய நிதியமைச்சக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சகத்தை சார்ந்த ஊழியர் பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை கொடுத்ததற்காக காஜியாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சகத்தின் ஊழியராக இருக்கும் இவரது பெயர் நவீன் பால். இதனையடுத்து இவரை மத்திய உளவுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சகத்தின் தகவல்கள் மற்றும் ஜி20 சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை பாகிஸ்தானின் கராச்சியைச் சார்ந்த நபர் ஒருவருக்கு நவீன் பால் கொடுத்ததாக உளவுப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் ஒரு சமூக வலைதள கணக்கின் மூலம் நவீன் பாலை பெண் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் அவருடன் நவீன் பால் பழகி வாட்சப் வழியாக தொடர்பு கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் போலீசாரிடம் நவீன்பால் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் அந்த பெண் உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் இருப்பது போன்று அவரது லொகேஷன் காண்பித்ததாகவும், பின்னர் அவரது இணையதள ஐ.பி முகவரியை ஆராய்ந்தபோது அது பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நவீன் பாலின் மொபைல் போனில் மத்திய நிதியமைச்சகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஜி 20 மாநாடு தொடர்பான சந்திப்புகள் தொடர்பான ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.







