ஊரடங்கை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், பரமசிவன், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில், பூமிநாதன், கு.சின்னப்பா உள்பட அனைத்துக் கட்சி நிர்வாபலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்துக் கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு முக்கியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடிக்குமாறு மக்களை அறிவுறுத்தி வழிகாட்டிகளாக நடப்பது என்றும் நிவாரணப் பணிகளில் முழு மனதுடன் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க அனைத்துக் கட்சி உறுப்பினர்களை கொண்ட குழு அமைப்பது எனவும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.