சின்ன திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது கணவர் மிரட்டுவதாக மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்திகள் பரவின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரட்சிதா தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியது மட்டுமின்றி கணவருடனான பிரிவு பற்றி மறைமுகமாக கூறியிருந்தார். இவர் தற்போது பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், திடீரென மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வந்த ரட்சிதா தான் மிரட்டப்படுவதாக புகார் ஒன்று அளித்தார். அதில் தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், அவர் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் இன்று தினேசை விசாரணைக்கு அழைத்திருந்தனர். அந்த அழைப்பை ஏற்று காவல்நிலையம் வந்த தினேஷ், தான் அவ்வாறு ஏதும் செய்யவில்லை, வேண்டுமானால் ரட்சிதா நீதிமன்றத்தை நாடி என்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ளட்டும் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









