நடிகையும், அரசியல் பிரமுகருமான சோனாலி போகத் உடலில் காயங்கள் உள்ளதாக பிரதேச பரிசோதனையின் முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சோனாலி போகத் பா.ஜ.க.வில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். 2019-ம் ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவர் 8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் பிரபல தொலைக்காட்சி தொடரிலும், வெப் தொடரிலும் நடித்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். 2020-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 22-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் சோனாலி இறப்பதற்கு முன் தனது தாய் மற்றும் சகோதரியிடம் பேசியுள்ளார். அப்போது உணவு உட்கொண்ட பிறகு அசௌகரியமாக உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து சோனாலியின் சகோதரி, அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால் சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் இல்லை என போலீசார் மறுத்தனர்.
இதுகுறித்து கோவா டி.ஜி.பி. ஜஸ்பால் சிங் கூறும்போது, சோனாலியின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகத்திற்குரிய விஷயம் எதுவும் தென்படவில்லை எனவும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என கூறினார். நடிகை சோனாலி போகத் மறைவு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சோனாலியின் 15 வயது மகள் யசோதரா நேற்று கூறும்போது, எனது தாயாருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியமுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார். மேலும், சோனாலியின் சகோதரர் ரிங்கு டாக்கா அஞ்சுனா காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், சண்டிகர் மற்றும் கோவாவில் போகட்டின் உள்ளுறுப்புகள் பரிசோதிக்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சோனாலியின் உடல் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. அதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவரது மரண வழக்கில் கொலைக்கான பிரிவும் சேர்க்கப்பட்டு உள்ளது. சோனாலியுடன் சம்பவத்தன்று இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் வாசி ஆகிய இருவரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளன.







