இந்திய கிரிக்கெட் அணி வீரர் மீது சமூகவலைதள பிரபலம் புகார் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருப்பவர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் நண்பர்களுடன் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது, சப்னா கில் என்ற சமூகவலைதள பிரபலம் அவருடன் செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பிரித்வி மறுப்பு தெரிவிக்கவே மோதல் வெடித்துள்ளது. சப்னா கில் தன் நண்பர்களுடன் இணைந்து பிரித்வி ஷா வந்த காரை பேஸ்பால் பேட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சப்னா தரப்பில் பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக பிரித்வி ஷா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சப்னா கில், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். முதலில் பிரித்வி செல்ஃபி எடுக்க ஒப்புக் கொண்டதாகவும், அதன் பிறகு மீண்டும் சிலர் செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாலே பிரச்னை ஏற்பட்டதாகவும், முக்கியமாக பிரித்வி அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் சப்னா தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.
இதனிடையே சப்னா கில் மற்றும் அவரது நண்பர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வெளியே வந்த உடனே அவர் மும்பை காவல்நிலையத்தில் பிரித்வி ஷா மீது புகாரும் அளித்திருக்கிறார். “பிரித்வி ஷா எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார். நாங்கள் பணம் கேட்டு எல்லாம் மிரட்டவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என சப்னா கில் கூறியுள்ளார்.
-ம.பவித்ரா









