ஜகபர் அலி கொலை வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு நீதிமன்ற காவல்!

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்த கல்குவாரி உரிமையாருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடந்த ஜனவரி 17ஆம் தேதி மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், துளையானூரில் உள்ள கல்குவாரியில் சட்ட விரோதமாக கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதாக எதிர்த்து போராடி வந்தார். இதனால் ஆர்ஆர் நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு மற்றும் ராமையா ஆகியோர்,  தன் கணவர் ஜகபர் அலியை கொலை செய்ததாக அவரின் மனைவி புகார் காவல்துறையிடம் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அந்த லாரியை ஓட்டி வந்த காசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் நேற்று கல்குவாரி உரிமையாளர் ராமையா நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். கனிம வளம் கொள்ளை போவதை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜகபர் அலியின் படுகொலையை கண்டித்து புறக்கணித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்த கல்குவாரி உரிமையாளர் ராமையாவை திருமயம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ராமையாவை வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.