36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்டனர்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சர்வதேச கடலோர எல்லையில் இந்திய-இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கையை மீறி கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று சந்தேகப்படும்படி, மணலி தீவு அருகே நின்று கொண்டிருந்தது. இந்திய கடலோர காவல் படையினரை பார்த்த உடன் படகிலிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றதுடன் கடலில் இரண்டு பார்சல்களை வீசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் பைபர் படகை மடக்கி பிடித்தனர். படகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் படகில் இருந்த வேதாளையை சேர்ந்த இருவர் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரையும் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடலில் வீசப்பட்ட பார்சல்களை மீட்பதற்காக மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகில் இருந்து ஸ்கூபா டைவர்ஸ், முத்து குளிக்கும் மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிடிபட்ட இருவரை அழைத்து கொண்டு மணலி மற்றும் சிங்கிலி தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் தங்கத்தை தீவிரமாக தேடினர்.

ஆனால் மாலை வரை தேடியும் கடத்தல் தங்கம் கிடைக்காததால் அவர்கள் வெறும் கையுடன் கரை திரும்பினர். இந்நிலையில் இன்றும் தொடர்ந்த இந்த தேடுதல் பணியில், சுமார் 2 முதல் 3 மணி நேரத்திற்கு உள்ளாகவே கடலில் வீசப்பட்ட பார்சல்களை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கத்தை மண்டபம் கடலோர காவல் படை முகாமில் வைத்து நகை மதிப்பீட்டாளரை கொண்டு எடை போடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading