ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளது.
மக்களின் தேவைகளுக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்குவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டு சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2015 ஜுன் 25ல் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகர மேம்பாடு, நகரங்கள் புதுப்பித்தல் மற்றும் நகர விரிவாக்கம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டது. நகரங்களை தேர்வு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது. 5 ஆண்டுகளை பெரும்பாலான நகரங்கள் நிறைவு செய்த நிலையில், இந்த ஸ்மார்ட் நகரங்களை தணிக்கை செய்ய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில் தனது அறிக்கையை டேவிதார் தாக்கல் செய்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது அறிக்கையை தாக்கல் செய்து, புகைப்படம் மற்றும் காணொலி ஆதாரங்களுடனான அறிக்கை தொடர்பான விளக்கங்களையும் அளித்தார்.