சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சோலார் பேனல் அமைக்கும் நிறுவனங்களிடம் நெட்வொர்க்கிங் சார்ஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட 19 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், இன்று ஒருநாள் மட்டும் திருப்பூரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு’ – அமைச்சர் உதயநிதி பேச்சு
கோவையில், சிறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் என சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பும், 100 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தொழில்துறையினர் எச்சரித்துள்ளனர்.







