சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தேங்காய் எண்ணெய்யில் பேன் எண்ணெய் கலந்திருப்பது அறியாமல் சத்துமாவுவில் கலந்து சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
மற்றும் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கி படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் தன்னுடைய ஊரில் இருந்து கொண்டு வந்த சத்துமாவை தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிடலாம் என நண்பர்களிடம் நேற்று இரவு கூறியுள்ளார்.
அப்போது வேறொரு மாணவன் தேங்காய் எண்ணெயில் பேன் எண்ணெய் கலந்து வைத்திருந்த பாட்டிலை மற்றொரு மாணவர் எடுத்து வந்துள்ளார். இதனை அறியாமல் பாட்டிலில் இருந்த எண்ணெயை சத்து மாவுடன் கலந்து சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் சத்துமாவை சாப்பிட்ட 6 மாணவர்களும் மயக்கம் அடைந்துள்ளனர்.
விடுதி நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் மயக்கமடைந்த 6 மாணவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







