மாணவிகளை மூளை சலவை செய்ததாக, சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப் பட்டுள்ளார்
கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறியதை அடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணை நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட அவருக்கு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுஷ்மிதா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்து மாணவிகளை மூளை சலவை செய்ததாக சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







