சென்னையில் மாநகர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் பொது போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் நாம் செல்லலாம். சாலையில் வாகன பயன்பாட்டை குறைத்து போக்குவரத்தை நெருக்கடியையும் குறைத்து மெட்ரோ ரயிலில் பயணிப்போர் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 1 மற்றும் கட்டம் 1 நீட்டிப்பில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியுடன் (வங்கி பங்குதாரர்) இணைந்து சிங்கார சென்னை அட்டையை (National Common Mobility Card – தேசிய பொது இயக்க அட்டை) அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, சிங்கார சென்னை அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மும்பை, பெங்களூரு, டெல்லி, கான்பூர் மெட்ரோ ரயில்களில் பயணிக்க பயன்படுத்தலாம். மும்பை மற்றும் கோவாவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
எதிர்காலத்தில், பேருந்து, புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம்.
அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபே தொழில்நுட்பம் இதன் அடிப்படையாகும். இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 2000 ரூபாய் சேமிக்க முடியும். புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. இந்த அட்டைகான இருப்புத்தொகையை பணம் மூலமாகவும் ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
சிங்கார சென்னை அட்டையின் முக்கிய அம்சங்கள்:
1. இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
2. இந்த அட்டையை இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தலாம்.
3. குறைந்தபட்ச KYC உடன் எளிதான பதிவு செயல்முறை.
பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதகிருஷ்ணன் சிங்கார சென்னை அட்டையை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வின் போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தி.அர்ச்சுனன் (திட்டம்), டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), CUMTA நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி ஐ. ஜெயக்குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, NPCI, Paycraft மற்றும் Ford ஆகியவற்றின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
முதற்கட்டமாக, 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் (கோயம்பேடு மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ, விமான நிலையம் மெட்ரோ, உயர்நீதிமன்றம் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ, கிண்டி மெட்ரோ) தேசிய பொது இயக்க அட்டை வழங்கப்படும். தேசிய பொது இயக்க அட்டைகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பு கேட்களிலும் பயன்படுத்தலாம்.
- பி.ஜேம்ஸ் லிசா










