சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் 117-வது பிறந்தநாள்; தலைவர்கள் மரியாதை

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 117-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு…

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 117-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்ய உள்ளனர்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பொன்னுசாமி கிராமணியார் சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 1906-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி மகனாகப் பிறந்த இவர், சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணத்தினால் சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். தான் பெற்ற அனுபவத்தாலும் சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும் சிறந்த தலைவராகவும் தமிழறிஞராகவும் விளங்கினார். கிராமணி குலம், தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தியவர்.

அண்மைச் செய்தி: ‘ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ பயணிக்கலாம்… என்னங்க சொல்றீங்க!!’

சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் சிலம்புச் செல்வர் என்னும் பட்டத்தை வழங்கினார். அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்துத் தனி ஆந்திர மாநிலம் அமைத்திடும் மத்திய அரசு முடிவுக்கு மதராஸ் மனத என்று ஆந்திரர்கள் எழுப்பிய குரலுக்கு ம.பொ.சி. கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று வீரமுழக்கமிட்டார், ம.பொ.சி.யின் தீவிர எல்லைப் போராட்டத்தின் காரணமாகத் திருத்தணி ஆந்திராவுக்குச் சென்று விடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது என்பது வரலாறு.

ம.பொ.சி சட்டமன்ற மேலவைத் தலைவராகத் திறம்பட பணியாற்றியதோடு தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் செயலாற்றினார். 1966-ஆம் ஆண்டு அவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு ‘சாகித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. அவரின் புதுத்தொண்டினை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. மெட்ராஸ் ஸ்டேட் என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் குரல் எழுப்பியவர் ம.பொ.சி ஆவார். அதனைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 1968-ஆம் ஆண்டு இதற்கான தீர்மானத்தைச் சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.