மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், காலில் சிறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால், சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். மக்களுக்கு சிறு துன்பம் என்றாலும் தமது குரல் எதிரொலிக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போது கமல்ஹாசன் நலமாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும், நான்கைந்து நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளனர்.
சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார் என்று விளக்கமளித்துள்ளனர். அனைவரது அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.







