ஜவான் திரைப்படம் 7ஆம் தேதி வெளியாகும் நிலையில், ஷாருக்கான், நயன்தாரா விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது. இதில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார்.
இதற்கான புரமோஷன் பணிகளில் ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடிகர் ஷாருக்கான் பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றார். அவர் முகத்தை மறைத்தபடி கோயிலுக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்றனர். குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டனர். வேட்டை, சட்டை,அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். எனவே ஓட்டமும் நடையுமாக சென்ற அவர்கள் கார் ஏறி அறைக்கு வேகமாக புறப்பட்டு சென்றனர்







