கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தும் கெபிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் பயிற்சி பெற்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கெபிராஜை கைது செய்து விசாரணை நடத்தியதோடு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே புகார் கொடுத்த மாணவி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றலாம் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபி திரிபாதிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.







