வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தால் கடுமையான மன சோர்வில் இருப்பதாக திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றபோது, திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், எதிர் முழக்கமிட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், திருச்சி சிவா வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் 4 பேர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதனையும் படியுங்கள்: தினம் தினம் உச்சம் தொடும் மின் நுகர்வு !!! மின்வாரியம் புதிய வியூகம்!
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..
”நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பஹ்ரைன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.
இப்போது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.
நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது…. கட்சி பெரியது… என்று எண்ணுபவன் நான். தற்போது நடந்துள்ள நிகழ்வுகள் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி காயமடைந்துள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. கடுமையான மன சோர்வில் உள்ளேன். மனச் சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை.” என திருச்சி சிவா எம்பி தெரிவித்தார்.
– யாழன்