அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல்…

இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல் நிலைய சரகம், கரம்பயம்,
செம்பாளுர், எட்டுப்புலிக்காடு, ஆலத்தூர், ஆலடிக்குமுளை, வீரக்குறிச்சி,பரங்கி
வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் கொள்ளை நடைபெற்று வந்தது. அரிவாளுடன் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பறித்துச் சென்றதும், இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வதும், பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துச் செல்வதும் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், மேற்கண்ட குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், காவல் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோரின் மேற்பார்வையில், குற்றப் பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவலர்கள் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடி வந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து முக்கிய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியின் புகைப்படத்தை எடுத்து தேடிவந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் பழனி என்கிற பழனி ஆண்டி (70) மேற்கண்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த நபர் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட தனிப்படையினர் மேற்படி நபர் இருக்கும் இடம் குறித்து கடந்த இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில், குற்றவாளி ஒரத்தநாடு குலங்களத்தில் 35 ஆண்டுகளாக தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குலமங்களம் கிராமத்தில் குற்றவாளியை மாறுவேடத்தில் போலீசார் தேடிச் சென்றபோது அங்கிருந்து தப்பித்து சென்றுவிட நேற்று ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீசார் அதிரடியாக குற்றவாளியை கைது செய்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 35 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து 5 வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றதும், இவர் மீது திருச்சிற்றம்பலம், திருவோணம் காவல் நிலையத்திலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து தண்டனை பெற்றிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், நகைகளை கொள்ளையடித்து ஒரத்தநாடு தாலுக்கா குலமங்கலம் கிராமத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் சொன்ன தகவலின் பேரில் களவுபோன நகைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் ஒரே இரவில் நான்கு வீடுகளில் புகுந்து
தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை பறித்துச் சென்றது
குறிப்பிடத்தக்கது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு குற்றவாளியைப் பிடித்த
தனிப் படையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.