லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று நடைபெற்ற முதல் சுற்றிலேயே போட்டியில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.
அமெரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் ஒற்றையர் மகளிர் பிரிவில் 7 முறை விம்பிள்டன் பட்டத்தை பெற்ற வரலாற்று சாதனைப்படைத்தவர். இந்நிலையில் லண்டனில் உள்ள ‘All England Lawn Tennis and Croquet Club’ மைதானத்தில் கடந்த 28-ம் தேதி இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. வரும் ஜூலை 11-ம்தேதி வரை விம்பிள்டன் போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் 8-வது முறையாக நட்சத்திர வீரர் செரினா வில்லியம்ஸ் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அலியாக்சந்திர சாஸ்னோவிச்சை அவர் எதிர்கொண்டார். போட்டி தொடங்கிய முதல் சுற்று ஆட்டத்தின் முதல் செட்டில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த செரினா வில்லியம்ஸ்,
பின்னர் இரண்டாவது சுற்று ஆட்டத்தின்போது செரினா வில்லியம்ஸ் நிலைதடுமாறி விழுந்ததில் அவரின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின் விளையாடத் தொடங்கினார். ஆனால் வலி அதிமான காரணத்தினால் போட்டியின் 34 நிமிடத்தில் போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
விம்பிள்டன் போட்டியில் ஏழு முறை மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் இந்த முறை காயம் காரணமாக போட்டியின் தொடக்கத்திலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
செரினா கண்ணீருடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் அவரை கௌரவப்படும் விதமாக எழுந்து நின்று கைதட்டி வழி அனுப்பிவைத்தனர்.
விம்பிள்டனின் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் இவ்வாறு ஆட்டத்தின் நடுவே வெளியேறியது இதுவே முதல் முறையாகும் . முன்னதாக கடந்த வாரம் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற போவதில்லை என்று செரினா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.







