செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அடையாறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு, மறுபட்ட தீர்ப்பை வழங்கியது. எனவே, இந்த வழக்கை விசாரித்த 3வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்னிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.







