மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்த்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு குறித்து முதலமைச்சருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில் சாதாரண சூழ்நிலையில், ஒரு ஆளுநர் அமைச்சரவையின் உதவி ற்றும் ஆலோசனையின்படி செயல்படுகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனது அறிவுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியைத் அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவது ஆரோக்கியமற்ற நிலையை பிரதிபலிக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், சட்டப்படியான நடைமுறையைத் தடுத்து, நீதியின் செயல்பாட்டை சீர்குலைத்துக்கொண்டே இருப்பார். இதன் இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பை சீர்குலைக்க வழிவகுக்கும்.
செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அட்டர்னி ஜெனரல் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன். செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் தொடர்பாக, என்னிடமிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை அறிவிப்பு ஒத்திவைப்படுவதாக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா