தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 70 இடங்களைக் கைப்பற்றியது. வருகின்ற மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கிறார். தமிழக சட்டமன்றத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததைத்தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தனது முதல்வரைப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான விஜய் நாராயணனும் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை, தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு அவர் அனுப்பிவைத்தார்.
2017ம் ஆண்டு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார் சென்னை இந்திய சட்ட நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராக 2012ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி பொதுக்குழு உறுப்பினராகச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். நாட்டின் பழமையான வழக்கறிஞர் சங்கங்களின் ஒன்றான மெட்ராஸ் பார் அஸோசியேஷன் தலைவராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.







