மும்பையில் மழைநீா் வடிகால்களை சரியாக தூா்வாராததால் ஒப்பந்ததாரா் மீது சிவசேனா சட்டமன்ற உறுப்பினர், குப்பைகளை கொட்ட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதையடுத்து அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள மழைநீா் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள் ளதால், பல்வேறு பகுதிகளில், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் காந்திவலி தொகுதி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் திலீப் லண்டே, அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் பல்வேறு பகுதிகளில் தேங்கி இருந்ததால், வடிகால்களைத் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரரிடம் அதுதொடா்பாக கேட்டார். பின்னர் அவர் தனது பணியை சரியாகச் செய்யவில்லை என்று கூறி, மழைநீா் ஓடும் சாலையில் அமரவைத்து, அவா் மீது குப்பைகளை கொட்ட வைத்தார். இதுதொடா்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாயின.
இதுபற்றி எம்.எல்.ஏ, திலீப் லண்டே கூறும்போது, சாலையை சரி செய்யுமாறு ஒப்பந்ததாரரிடம் கடந்த 15 நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்யவில்லை. சிவசேனா தொண்டர்கள், தாங்களாகவே இந்த வேலையை செய்தனர். அவருக்கு விஷயம் தெரியவந்ததும் உடனடியாக இங்கு வந்தார். இது அவருடைய பொறுப்பு, அதை சரி செய்திருக்க வேண்டும்’ என்று சொன்னேன் என்றார்.
எம்.எல்.ஏ.வின் இந்தச் செயலுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.







