சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6.62 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் சார்ஜாவிலிருந்து ஏர் அரேபிய விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் அடிக்கடி போதை பொருட்கள் மற்றும் தங்கம் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுகிறது. கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வெளியேறும் வழியில் சந்தேகத்துக்கு இடமான பயணிகளை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 11 பயணிகள் தங்களுடைய உள்ளாடை, கால்சட்டை மற்றும் ஷூக்கலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
11 பேரிடமும் இருந்து மொத்தம் 3.8 கோடி ரூபாய் மதிப்பிலான 6.62 கிலோ தங்கத்தை பறிமுதல் அதிகாரிகள் செய்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக நடத்திய விசாரணையில் அவர்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– அனகா காளமேகன்







