உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தன் வளர்ப்பு மகள்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். இந்த நிகழ்வை கண்ட அங்கிருந்த மூத்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் திகைப்பில் ஆழ்ந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கடந்த ஆண்டு நவம்பர் 10 -ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 2024-ஆம் ஆண்டு நவம்பர் 10 வரை, அதாவது இரண்டு ஆண்டுகள் பணியில் இருப்பார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1959 நவம்பர் 11-ம் தேதி மும்பையில் பிறந்த டி.ஒய்.சந்திரசூட் ராஷ்மி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் முதல் மனைவி ராஷ்மி திடீரென 2007ல் மறைந்ததை அடுத்து இரண்டாவதாக கல்பனா தாஸ் என்பவரை சந்திரசூட் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில் மகி (வயது 16), பிரியங்கா (வயது 20) ஆகிய இருவரையும் தத்தெடுத்து வளர்ப்பு மகள்களாக பராமரிப்பது வருகிறார்.வளர்ப்பு மகள்கள் இருவருமே மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆவர்.
இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றிப் பார்க்க விரும்பியதுடன், வழக்கு விசாரணை நடக்கும் முறைகளை பற்றி அறிய தந்தை சந்திரசூட்டிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.மகள்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த நீதிபதி சந்திரசூட் அவர்கள் நேற்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற பொது கேலரி வழியாக அழைத்து வரப்பட்ட நீதிபதி சந்திரசூட்டின் மகள்களை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.பின்னர் அறை எண் 1-ல் உள்ள தலைமை நீதிபதி நீதிமன்றத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று நீதிமன்றம் செயல்படும் விதத்தைக் காட்டியதுடன், நீதிபதிகள் அமரும் இடத்தையும், வழக்கறிஞர்கள் வாதிடும் இடத்தையும் காட்டினார்.
பின்னர், நீதிபதி சந்திரசூட் மகள்கள் இருவரையும் தனது அலுவலகத்தை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று ‘பார், இங்குதான் நான் அமர்ந்திருக்கிறேன் என்று கூறி, அங்கு தன் பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். நீதிபதி சந்திரசூட் அவர்களின் இந்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.