கென்யாவில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!

கென்யாவில் வரி விதிப்பு போராட்டால் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக  இருக்குமாறு இந்திய  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  ஆப்பிரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது.  வெளிநாட்டு கடனும்…

கென்யாவில் வரி விதிப்பு போராட்டால் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக  இருக்குமாறு இந்திய  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது.  வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது.  இந்நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவர வரிகளை உயர்த்த அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளநிலையில்,  இந்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரிவிதிப்பு தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் ஆசோசனை நடந்துள்ளது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, தடுப்புகளை உடைத்துள்ளனர்.இதனை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் கென்யாவில் உள்ள இந்தியர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கென்யாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்” என கோரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.