விஞ்ஞான வளர்ச்சி பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி விண்வெளித்துறை மட்டுமில்லாது பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.   இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர்…

நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி விண்வெளித்துறை மட்டுமில்லாது பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தருமபுரம் ஆதின மடத்தில் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார்.

 

அவருக்கு ஆதினம் சார்பில் நினைவு பரிசும், திருக்குறள் புத்தகமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவன், தருமபுரம் ஆதீனம் நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியது என்றார். நமது நாடு விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்திதுறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல்துறை ரசாயனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது.

விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும். தற்போது 81 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும். மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இளைஞர்கள் யங்க் பாரத் இந்தியா என்றும், இந்த வேகத்தில் நாம் சென்றால் பாரதி கண்ட இளைய பாரதம் வெகு சீக்கிரம் அடையலாம் என்றும் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.