அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்க அகஸ்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பு ஆண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; அதன் பணிகளை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மையம், நடமாடும் அறிவியல் ஆய்வகம், இளம் பயிற்றுனர் தலைவர் திட்டம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த 5 பயிற்சித் திட்டங்களை நேரடியாக வகுப்புகளுக்கு சென்று நடத்த அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். கடந்த ஆண்டில் 18 மாவட்டங்களில் மட்டும் இந்த பயிற்சிகளை இணைய வழியில் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அறிவியல் வளாகம் அமைக்கப்படுவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளையின் ஆதிக்கம் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது.
அறிவியல் மையம், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பயிற்சிகள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அத்தகைய பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் எத்தகைய பின்னணி கொண்டது என்பதுதான் முக்கியம்.
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதுடன், தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கையை வகுப்பதற்கு குழுவை அமைத்துள்ளது. இத்தகைய சூழலில், புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் நிறுவனத்தைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் முடிவை கடந்த ஆண்டு எடுத்ததுடன், நடப்பாண்டில் அந்த நிறுவனத்தின் சேவைகளையும் விரிவுபடுத்த திமுக அரசு அனுமதித்திருக்கிறது.
அகஸ்தியா அறக்கட்டளை வழங்கும் அறிவியல் சார்ந்த பயிற்சிகள் உலகில் வேறு எங்கும் கிடைக்காதவை அல்ல. அத்தகைய பயிற்சிகளை தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கொண்டு வழங்க முடியும். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்க அகஸ்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசின் கல்வித்துறை வல்லுனர்களைக் கொண்டு இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







