கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ்கள் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்க அனுமதிப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.







