தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறைகளின்போதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்வுகள் முடிந்த பிறகு கடந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தங்கிப் படித்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். மேலும், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்துவிட்டதால், சென்னைக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். இன்று இரவு அதிகப்படியானோர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சுமார் 250 கூடுதல் பேருந்துகளை பல்வேறு இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக 250 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக இருக்கும்படி அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக பள்ளிகளுக்கு செல்வோர் தினசரி காலை, மாலை நேரங்களில் பஸ், ஆட்டோ, பைக் போன்றவற்றில் அதிகமாக பயணிப்பார்கள். மேலும், மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளிப் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படும். இதுபோன்ற காரணங்களால் சில நாட்களாக குறைந்து இருந்த போக்குவரத்து நெரிசல் மீண்டும் அதிகரித்துக் காணப்படும் என்றார்.
-ம.பவித்ரா