அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களின் சேவையை பாராட்டி பள்ளிக்குழந்தைகள் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. சேற்றில் கால் வைக்கும் விவசாயிக்கு, செழித்து வளரும் பயிரே அங்கீகாரம். தன் மருத்துவத்தால்…

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களின் சேவையை பாராட்டி பள்ளிக்குழந்தைகள் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சேற்றில் கால் வைக்கும் விவசாயிக்கு, செழித்து வளரும் பயிரே அங்கீகாரம். தன் மருத்துவத்தால் உயிர் பிழைக்கும் மனிதனின் சிரிப்பு ஒரு மருத்துவனுக்கு அங்கீகாரம்

ஆனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களோ, தங்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரத்தை எண்ணி சிலாகித்து வருகின்றனர், 250 குழந்தைகள், பிஞ்சு கைகளின் கொஞ்சும் எழுத்துக்கள் அத்தனையிலும் நன்றி என்று எதிரொலிக்கும் வார்த்தைகளும் வர்ணங்களும்.

கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமென எண்ணி பணிபுரிகின்றனர் மருத்துவர்கள். அவர்கள் சேவையை பாராட்டி, சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பின் ஏற்பாட்டில் 250 குழந்தைகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ”நன்றி” கடிதங்களை எழுதியுள்ளனர்.

தங்களால் குணமடையும் நோயாளிகள் நன்றி சொல்லும் போது ஒரு வகையான உணர்வு அனைத்து மருத்துவர்களுக்கும் ஏற்படும். ஆனால் முகம் தெரியாத குழந்தைகள் தங்கள் சேவையை வாழ்த்துவதும் அங்கீகரிப்பதும் முற்றிலும் புதிய உணர்வு என்கின்றனர் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் ஊழியர்கள். அரசு மருத்துவமனை என்றால் ஒரு வித ஏளன பேச்சு என்பதை இந்த கோவிட் காலம் மாற்றியிருக்கிறது. அதிலும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் சேவைக்கு பாராட்டுக்கள் ஒவ்வொரு நாளும் குவிந்து வருகிறது.

ஒரு லட்சம், இரண்டு லட்சம் என மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கப்பட்டதும், கொரோனா காலத்தில் நடந்துள்ளது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மகுடமாய் குழந்தைகளின் நன்றி மடலை மதிக்கின்றனர் மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் பிஞ்சு நெஞ்சங்களின் அன்பு முத்தங்களுக்கும் ஆசை வார்த்தைகளுக்கும் மயங்காதோர் உண்டோ.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.