அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரின் சினிகிரிப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவி நவ்யாஸ்ரீ கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், திங்கட்கிழமை பள்ளி முடித்து அரசு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், மாணவியின் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேருந்து நிற்காததையடுத்து மாணவி பேருந்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதன் காரணமாக பேருந்தின் பின் சக்கரங்கள் மாணவியின் கை மற்றும் கால் மீது ஏறியுள்ளது. இதனையடுத்து மாணவி அதே பேருந்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க சம்பந்தப்பட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும்,
அதேபோல மாணவர்களை அழைத்துச் செல்லும் போது ஓட்டுநர்கள் அவசரகதியில் செல்லக்கூடாது என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.