மத்திய அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை கடந்த அதிமுக அரசு திருப்பி அனுப்பியது போல் அல்லாமல், இந்த அரசு அந்த தொகையை முழுமையாக அந்த மாணவர்களுக்கு பயன்படுத்தும் என அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் 35வது நினைவு தினம் தமிழ்நாடு அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “தமிழ்நாடு அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வரும் கல்வியாண்டில் முழுமையாக வழங்கப்படும்.
மத்திய அரசின் தொகையை சரியாக கடந்த அதிமுக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி வைத்தது, ஆனால் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, மத்திய அரசு வழங்கும் தொகை முழுமையாக அந்த மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும். உண்டு, உறைவிட பள்ளியில் காலியாக உள்ள வாடர்ன் பணியிடங்கள் நிரப்பட்டுப்படும்.” எனத் தெரிவித்தார்.







