பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோயிலுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோயிலுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழையக் கூடாது என அதே பகுதியில் வசித்து வரும் ஒரு சமூதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது திரெளபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

இதனால் மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து திரெளபதி அம்மன் கோயிலை இன்று காலை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இதனால் மேம்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.