காதல் மூலம் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என நடிகர் சமந்தா சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கும் இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடிகை சமந்தா நடித்து முடித்தார்.
தற்போது மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின. எனவே புதிதாக ஒப்பந்தமாகவிருந்த படத்திற்கான முன்பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாகவே தேவாலயங்களுக்குச் செல்வது இயற்கையுடன் ஒன்றியிருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் சமந்தா, சமூக வலைதளத்தில் சிலி நாட்டு எழுத்தாளர் ஒருவரின் தத்துவத்தைப் பகிர்ந்துள்ளர். அதில், ”மரணத்தில் இருந்து நம்மை எதுவும் காப்பாற்றாது. எனவே காதல் மூலமாவது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களால் வைரலாகி வருகிறது.







