குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பை சௌராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
காசிக்கும் தமிழகத்துக்குமான கலாச்சார, பண்டைய தொடர்பு மற்றும் அறிவுசார் தொடர்புகளை கண்டறியும் விதமாகவும், புதுப்பிக்கும் விதமாகவும் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ” காசி தமிழ் சங்கமம்” திருவிழா காசியில் நடத்தப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆன்மீகவாதிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் தற்போது சௌராஷ்டிரா சங்கமம் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சௌராஷ்டிராவில் இருந்து குடிபெயர்ந்து தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் மக்கள் தான். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12 லட்சம் சௌராஷ்டிரியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கும், குஜராத்துக்கும் இடையேயான கலாசார தொடர்பு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.
இப்படி, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காசி தமிழ் சங்க நிகழ்ச்சியை போன்றே இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான லோகோ, தீம் பாடல், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்வதற்கான போர்ட்டல் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சேலத்தில் தாண்டியா நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் தர்ஷனா சர்தோஷ், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜகதீஷ் விஸ்வகர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பை சௌராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.