சவுதி அரேபியா : பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

சவுதி அரேபியாவில் பேருந்தும், டீசல் லாரியும் மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு 43 பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.