சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ – ஏடிஎஸ்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்றப் பத்திரிக்கைகள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுப் பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 B(கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, உரியக் குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது கூட்டுச் சதி உட்பட விடுபட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2வது அறிக்கையின்படி கீழமை நீதிமன்றமே வழக்குகளைச் சேர்ப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.







