சிறந்த நடிகருக்கான விருது வென்ற சசிகுமார் – இயக்குநர் பாலா பாராட்டு!

விருது வென்ற சசிகுமாருக்கு இயக்குநர் பாலா பாராட்டு மடல் எழுதி உள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 11ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சசிகுமாருக்கு டூரிஸ்டு பேமிலி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருது வென்ற சசிகுமாருக்கு இயக்குநர் பாலா பாராட்டு மடல் எழுதி உள்ளார்.

அதில், “பேரன்பு சசி. சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன் பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன். உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்கள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் “சம்பவக்காரன் சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.