சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படத்துக்கு ’அயோத்தி’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், ‘அயோத்தி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இயக்குநர் மந்திரமூர்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடித்த மான்ஸ்டர் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் மந்திரமூர்த்தி கூறும்போது, “எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறை யாவது சந்திக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் பேசுகிறது. இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதாகத் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான கதை இது. கதையை கேட்டதும் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார்” என்றார்.
மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டதற்கு, “இந்த படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது” என்றார். இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஹீரோயின் கிடையாது என்று கூறப்படுகிறது.
‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். என் ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.








