“சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஏற்க முடியாது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மதுசூதனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க சசிகலா தனியார் மருத்துவமனைக்கு வந்து மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த வருகையின்போது சசிகலா தனது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதைக் சுட்டிக்காட்டி “சசிகலாவின் இந்த செயலை ஏற்க முடியாது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மதுசூதனனின் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்திருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா வந்தவுடன் மருத்துவமனையைவிட்டு வெளியே சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








