சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.
கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படமால் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய தலைமை நீதிபதிக்கு அமைச்சர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வாழ்த்து தொரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










