தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான இனிப்பு, காரம் வகைகளை பொதுமக்கள் ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் உபபொருட்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலம் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களுக்குத் தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.







