ராஜஸ்தானில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக அக் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
இதையும் படியுங்கள் : கோமியத்தை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல!! – ஆய்வு நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் பாஜக அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2018-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை சச்சின் பைலட் அறிவித்தார்.
அதன்படி, ஜெய்ப்பூரில் உள்ள ஷாகீத் சமர்க்கில் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சச்சின் பைலட் ஈடுபட்டுள்ளார். கட்சி தலைமையின் எச்சரிக்கையையும் மீறி சச்சின் பைலட் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம், அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.







