விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் பல காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த 2020ம் ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தனது பெயரை பயன்படுத்தி அரசியல் கூட்டங்கள் நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரியில் நடந்த பொது கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.






