உக்ரைனில் கீவ் நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தி விட்டு இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால், இந்த போர் 16 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று ரஷ்ய ராணுவம் உக்ரைன் கீவ் நகரில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர் லைசாக் வெளியிட்ட டெலிகிராம் பதிவில் கூறியதாவது,
”கீவ் பகுதிகளின் மீது இன்று ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மக்களின் உடைமைகள் பெரிதளவில் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்பு மீதும் ரஷ்ய படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், அடுக்கு மாடி கட்டம் தாக்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியிருப்பவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.







